அடிப்படைவாதங்களுக்கு இலங்கையில் இடமில்லை! அடியோடு ஒழிக்கப்படும் - பாதுகாப்பு அமைச்சின் செயலர் உறுதி
நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்குவதற்கு ஒருநாளும் இடமளிக்கப்படாது என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின் ஏனைய பாதுகாப்பு தரப்பினரும் மிகவும் அவதானத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே அடிப்படைவாதிகள் தலைதூக்குவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படைவாதத்தை போதிக்கும் புத்தகங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவை அடையாளம் காணப்பட்டு சுங்கத் திணைக்களத்தினர் அவற்றை கைபற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை புத்தகங்களிலும் பிழையான விடயங்கள் சில கற்பிக்கப்படுவதாகவும் அவையும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிலை வழிபாடுகளில் ஈடுபடுவோரை கொலை செய்தல், வேற்று மதங்களை வழிபாடு செய்வோரை துன்புறுத்தல் போன்ற விடயங்கள் பாடசாலை புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிழையான விடயங்கள் உள்ளடக்கப்பட்ட புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டு அவ்வாறான விடயங்கள் நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.