தமிழர் பகுதியில் தொடரும் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கள்!
மூதூர், கங்குவேலி குளமானது சிலரால் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு நவீன இயந்திரங்களைக் கொண்டு சேதமாக்கப்பட்டு வருவதனால் குளத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி குளமானது சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் விவசாய சம்மேளத்தினரால் மூதூர் பிரதேச செயலாளர், காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென விவசாய சம்மேளனம் தெரிவிக்கின்றது.
சட்டவிரோத நடவடிக்கை
இது தொடர்பில் திருகோணமலையில் நேற்றைய தினம் (10) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் பின்னர் ஆளுநரை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதனை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் இன்றும் (11) வரை குறித்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே இருப்பதாக சம்மேளன உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
கங்குவேலி கிராமத்தில் உள்ள கங்குவேலி குளமானது கடந்த ஒரு வாரகாலமாக சிலரினால் ஆக்கிரமிக்கப்பட்டு, கனரக வாகனங்களின் உதவியுடன் குளத்தின் அணைக்கட்டு சேதமாக்கப்பட்டும் வாய்க்கால்கள் வெட்டப்பட்டு குளத்து நீரானது வெளியேற்றப்பட்டு குளத்தினுள் விவசாயம் மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் இக்குளத்தினை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற கங்குவேலி கிராமத்தைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இக்குளமானது பல ஆண்டுகளின் பின்னர் 2019ஆம் ஆண்டு 24 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது.
புனரமைப்பு நடவடிக்கையின் போது சிலர் குளத்தின் அணைக்கட்டுப் பகுதிகளை சேதமாக்கி சட்ட விரோதமான முறையில் குளத்தினுள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
குளத்தின் ஆக்கிரமிப்பை
அத்துடன் தாங்கள் நீண்டகாலமாக இப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்ய அனுமதிக்குமாறும் கோரி குறித்த நபர்களினால் கொழும்பு நீதிமன்றில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2019.12.05 அன்று சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த அப்போதைய மாவட்ட செயலாளர், நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த குறித்த 11 பேருக்கும் ஸ்ரீமங்களபுர பகுதியில் மாற்றுக் காணி தருவதாக தெரிவித்து குறித்த 11பேரையும் வெளியேற்றி குளத்தின் புனரமைப்புப்பணியை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் தற்போதும் இக்குளமானது மீண்டும் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் காவல்துறையினரிடம் முறையிட்டபோதும் இது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
அத்துடன் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு குளத்தின் ஆக்கிரமிப்பை நிரந்தரமாக தடைசெய்து இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என கங்குவேலி திருக்கரைசயம்பதி விவசாய சம்மேளனத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.