சர்ச்சையைக் கிளப்பிய கஞ்சிப்பானி இம்ரானின் கைது விவகாரம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் அறிவிப்பு
போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுக்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களின் பிரதான நபர்களில் ஒருவரான கஞ்சிப்பானி இம்ரான் எனப்படும் மொஹமட் நஜீம் கைது செய்யப்படவில்லை என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கஞ்சிப்பானி இம்ரான் நேற்று முன்தினம் (16) இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரதியமைச்சரிடம் ஊடகமொன்று வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்பட்டதாக என்னை மேற்கோள் காண்பித்து வெளியிடப்படும் செய்திகளில் உண்மையில்லை. ஆனால் குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போலி கடவுச்சீட்டு
முன்னதாக கடந்த 2019 ஏபரல் 4ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணையின் பின் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பானி இம்ரான் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி போலி கடவுச்சீட்டில் டுபாய் சென்றுள்ளார்.

போலி கடவுச்சீட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே ஏனைய கொலை முயற்சிகள் தொடர்பில் அவர் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
2015இல் டுபாய் சென்றுள்ள கஞ்சிப்பானி இம்ரான், 2016 ஜனவரி 26 ஆம்திகதி அங்கு வதிவிட வீசாவைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
பிணையில் விடுதலை
இவ்வாறான நிலையில் 27 சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதியன்று அனைத்து வழக்குகளிலும் கொழும்பு மேலதிக நீதிவானால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவர் படகுமூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து வெவ்வேறு கடவுச்சீட்டுக்களின் ஊடாக ஐரோப்பிய நாடொன்றில் தலைமறைவாகியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்” என குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |