வாள்வெட்டாக மாறிய குழு மோதல்- வீடுகளுக்குள் முடங்கிய இளைஞர்கள்!
திருகோணமலையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெட்டுக்காயங்களுக்குள்ளான நபர் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருகோணமலை கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பளுகஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளதோடு சொத்துக்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதோடு, அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் வெளியில் நடமாடுவதை தவிர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் உள்ள லொறியொன்றும் பெட்டிக்கடை ஒன்றும் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் காவல்துறையினர் சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.