முன்னாள் சபாநாயகருக்கு சிறிலங்காவின் உயரிய விருது!
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரியவுக்கு சிறிலங்காபிமான்ய என்ற கௌரவப் பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதிபர் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த கௌரவ பட்டம் வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தேசத்திற்கு மிகச்சிறந்த சேவை செய்தவர்களுக்கு சிறிலங்காபிமான்ய எனும் அதியுயர் கௌரவ பட்டம் அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது.
கௌரவ விருது
கடந்த 2018 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் தேசபந்து கரு ஜயசூரிய முக்கிய பங்கு வகித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த மதிப்புமிக்க விருதை பெறும் எட்டாவது நபர் என்ற பெருமையை 82 வயதான முன்னாள் சபாநாயகர் பெற்றுள்ளார்.
இதேவேளை, கடந்த 1986 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாச இந்த விருதினை முதலாவதாகவும் 2017 ஆம் ஆண்டு டபிள்யூ.டி.அமரதேவவும் இந்த விருதினைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

