உலகத் தலைவர்களைச் சுருக்கும் எப்ஸ்டீன் வலை! அடுத்தடுத்து நேரும் பதவி விலகல்கள்
பிரபல முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனத்தின் உயர்மட்டச் சட்டத்தரணி கேத்தி ரூம்லர், பாலியல் குற்றவாளியான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் வெளிவந்ததையடுத்துத் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட விசாரணை கோப்புகளில், ரூம்லர் எப்ஸ்டீனிடமிருந்து பரிசுகளைப் பெற்றதும், அவருக்கு நற்பெயர் மேலாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்கியதும் தெரியவந்துள்ளது.
எப்ஸ்டீனைத் தனது சொந்தச் சகோதரர் போலக் கருதுவதாக அவர் குறிப்பிட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வங்கியின் நற்பெயரைக் கருத்திற்கொண்டு வரும் ஜூன் இறுதியில் அவர் பதவி விலகத் தீர்மானித்துள்ளார்.
முக்கிய தலைவர்கள்
இந்த விவகாரம் சர்வதேச அளவில் பல முக்கிய தலைவர்களையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவில் முன்னாள் தூதுவர் பீட்டர் மண்டல்சன் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான தொடர்புகள் குறித்துக் காவல்துறை விசாரணை தொடங்கியுள்ள நிலையில், சர்ச்சைகளைக் குறைக்கும் முயற்சியாக அந்நாட்டு அமைச்சரவைச் செயலாளர் கிறிஸ் வார்மால்ட் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

அதேபோல் நோர்வேயிலும், முன்னாள் பிரதமர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட் எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்புகள் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் அவரது சொத்துகளில் அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளனர்.
2019-இல் சிறையில் உயிரிழந்த எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில், செல்வாக்கு மிக்க பல முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து சட்டச் சிக்கல்களையும் பதவி இழப்புகளையும் சந்தித்து வருவது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |