கேரளாவை உலுக்கிய கொடூரம்: ஒன்றரை வயதுக் குழந்தை அடித்துக் கொலை - தாய் உட்பட இருவர் கைது!
கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உடல் ரீதியான கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நெடுமங்காடு அருகே உள்ள பனவூர் பகுதியில் வசித்து வந்த ஆர்ஷித் என்ற ஒன்றரை வயதுக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் தாய் மற்றும் அவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடல்நலக்குறைவு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிவித்து அவரது தாய் மற்றும் குறித்த நபரால் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இருப்பினும், மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

உணவு சாப்பிட்ட பிறகு குழந்தை திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக சந்தேகநபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் முதற்கட்டமாக இது இயற்கைக்கு மாறான மரணம் (Unnatural death) என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும் குழந்தையின் பிரேதப் பரிசோதனை (Autopsy) அறிக்கையில் குழந்தை கொடூரமாகத் தாக்கப்பட்டு அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே உயிரிழந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ அறிக்கை அவர்களின் பொய்யான வாக்குமூலத்தை முறியடித்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு குழந்தையின் தாய் அகிலா (Akhila) மற்றும் அவருடன் இருந்த நபர் அஷ்கர் (Ashkar) ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மக்கள் ஆவேசம்
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (31-05-2026) விசாரணையின் ஒரு பகுதியாக ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக சந்தேகநபர்கள் இருவரும் அவர்கள் வசித்து வந்த வீட்டிற்குக் காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள், இருந்த குறித்த நபரைக் கடுமையாகத் தாக்க முற்பட்டுள்ளனர்.

குழந்தையைக் கொன்ற பாவி என முழக்கமிட்டபடி மக்கள் ஆவேசமடைந்ததால் நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பெரும் சிரமப்பட்டுள்ளனர்.
சூழல் மோசமடைந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் அவசர அவசரமாக ஆதாரங்களைச் சேகரித்துவிட்டு இருவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த அசாம்பாவிதத்தின் போது சந்தேகநபர்களுக்குச் சொந்தமான வாகனம் ஒன்றும் மக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தையின் பாதுகாப்பு
அந்தப் பகுதியில் சில மாதங்களாக வசித்து வந்த இக்குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினருடன் அதிகமாகப் பழகுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த குழந்தை அடிக்கடி அழுவதைக் கேட்டதாகவும் இதற்கு முன்பே குழந்தையின் இரு கைகளிலும் கட்டு (Plaster casts) போடப்பட்டிருந்த அளவுக்குக் காயங்கள் இருந்ததைத் தாங்கள் கவனித்ததாகவும் அண்டை வீட்டாரும் குழந்தையின் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

குழந்தையின் தந்தை, குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டதாகவும் அதன் பின்னர் குடும்பத்திற்குள் ஏற்பட்ட குழப்பங்களால் குழந்தையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா, இந்தத் துயரம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது என்றும் குற்றவாளிகளுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இக்கொடூரக் கொலை குறித்துக் காவல்துறையினர் மேல் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |