பிரித்தானியாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
பிரித்தானியாவின் லண்டனில் உள்ள கே.எப்.சி கிளை ஒன்றில் பணியாற்றிய தமிழக இளைஞருக்கு எதிராக இனவெறி பாகுபாடு காண்பித்த இலங்கைத் தமிழரான மேலாளருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனது முகாமையாளராக இருந்த இலங்கைத் தமிழர் தன்னை அடிமை என்று அழைத்ததாகவும், இந்தியர்கள் மோசடி செய்பவர்கள் எனக் கூறி இன ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுமுறை கோரிக்கை
மேலும், இந்தியர் என்பதால் தனக்கு விடுமுறை மறுக்கப்பட்ட நிலையில், இலங்கையைச் சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை கோரிக்கைகளுக்கு முகாமையாளர் முன்னுரிமை அளித்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அளவுக்கு அதிகமான நேரங்கள் வேலை செய்யுமாறு முகாமையாளர் வற்புறுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அந்த இளைஞர் தனது விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார்.
அதன் பின்னரும் முகாமையாளர் அவரைத் தொலைபேசியில் அழைத்து மிரட்டியதோடு, தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
முன்னறிவிப்பு
இந்தநிலையில், இளைஞர் முறையாக விலகல் கடிதம் கொடுத்தும், சட்டப்படி வழங்க வேண்டிய ஒரு வார கால முன்னறிவிப்பு காலத்தை வழங்காமல் அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், சட்டப்படி வழங்க வேண்டிய ஒரு வார கால முன்னறிவிப்பு காலத்தை வழங்காமல் இளைஞர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகையாக 62,690 பவுண்ட்களும், விடுமுறை ஊதியம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளுடன் சேர்த்து மொத்தம் சுமார் 66,800 பவுண்ட்களை வழங்க உத்தரவிட்டது.
மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் குறித்த நிறுவனம் தனது முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பணியிடத்தில் பாகுபாடு காட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் குறைகளை முறையாகக் கையாளுவது குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |