பஹல்காம் தாக்குதல் மோடிக்கு முன்பே தெரியும் : பகீர் கிளப்பிய கார்கே
பஹல்காம் (Pahalgam) தாக்குதல் மூன்று நாளுக்கு முன்னரே மோடிக்கு (Narendra Modi) தெரியும் என கார்கே (Mallikarjun Kharge) பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் (Jammu & Kashmir) பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல்
தொடர்ந்து நாடு முழுவதும் நாடு தழுவிய போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.
இந்நிலையில், ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ''தீவிரவாத தாக்குதல் நடக்கப்போவது மத்திய அரசுக்கு முன்பே தெரியும்.
குறிப்பாக மூன்று நாட்களுக்கு முன்பாகவே புலனாய்வு அமைப்பு பிரதமர் மோடிக்கு தாக்குதல் தொடர்பான தகவலை கொடுத்திருக்கிறார்கள்.
அதனால் தான் காஷ்மீருக்கு செல்ல திட்டமிட்டிருந்த அவருடைய பயணமானது ரத்து செய்யப்பட்டது. பிரதமர் மோடி அவருடைய உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை.
பாதுகாப்பு படை
எதற்காக காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தாமல் விட்டீர்கள். எல்லை பாதுகாப்பு படை; துணை ராணுவ படை; ராணுவம் இருக்கிறது.
இவற்றையெல்லாம் உஷார் படுத்தி பாதுகாப்பை ஏன் உறுதி செய்யவில்லை? அதேநேரம் தீவிரவாதத்தை பொருத்தமட்டில் எப்போதும் காங்கிரஸ் தீவிரவாதத்திற்கு எதிராக இருக்கும். இதில் அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் நாங்கள் துணை நிற்போம்.
இந்த தாக்குதல் நடந்த பிறகு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூட அரசு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் துணை நிற்போம் என்றுதான் உறுதி அளித்தோம்.
ஆனால் இந்த தாக்குதல் குறித்து புலனாய்வு அமைப்பு தகவல் கொடுத்த பின்னரும் பிரதமர் அலட்சியமாக இருந்துள்ளார்'' என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
