யாழில் மாபெரும் பேரணி - வடக்கு ஆளுநர் செயலகத்திற்கு முன் பெருமளவு காவல்துறையினர் குவிப்பு!
கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடைந்தது.
இதன் போது, வடமாகாண ஆளுநரின் செயலாளரை சந்தித்த போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டினர்.
பெருமளவு காவல்துறையினர் கடமையில்
இவ்வாறு ஆளுநர் செயலக்கத்திற்கு போராட்டக்காரர்கள் சென்ற போது, ஆளுநர் அலுவகத்தில் இல்லை எனவும், இரண்டு வாரங்களுக்குள் இதற்கான பதிலை தருவதாகவும் ஆளுநரின் செயலர் தமக்கு வாக்குறுதியளித்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
போராட்டம் இடம்பெற்ற வேளை சிறிலங்கா காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் ஆளுநர் செயலக நுழைவாயில் மறிக்கப்பட்டு பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டதுடன் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.




நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

