மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பொது சந்தை- வெளிப்புறத்தில் கூடிய வியாபாரிகள் மற்றும் மக்கள்!
கொரொனா தொற்றுக் காரணமாகவும், கிளிநொச்சி பொதுச் சந்தையில் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதன் காரணமாகவும் பொதுச் சந்தையினை இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதாக கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது.
இருந்த போதும் சந்தைக்கு வெளியே வழமை போன்று பொதுச் சந்தையின் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. சந்தையின் உள்ளே காணப்பட்ட ஓரளவான சுகாதார பாதுகாப்பு கூட வெளியில் காணப்படாத அளவுக்கு செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நேற்று மாத்திரம் 257 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் பொது மக்கள் அதிகளவு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும் என சுகாதார தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அதற்கு மாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை கவலை தரும் விடயம் எனவும், ஆபத்தின் நிலைமையினை உணர்ந்து பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சுகாதார பிரிவினர் கோரி வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுச்சந்தையினை பூட்டிவிட்டு வர்த்தகர்களுக்கு வழிகாட்டாது அவர்களை வெளியில் அனுமதித்து வழமை போன்று செயற்படுவதற்கு அனுமதி வழங்கிய செயற்பாடு கண்டிக்கதக்கது எனவும் இது மேலும் தொற்று பரவலுக்கு வழிசமைக்கும் என்றும் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

