குருந்தூர்மலை தீர்ப்பை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வோம்
குருந்தூர்மலை விடயத்தில் சட்டதரணிகளோடு இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளை இன்றையதினம்(31) வழங்கப்பட்டிருந்தது.
வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பின்ணனி

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்ககையில்,
“குருந்தூர் மலை விடயத்தில் நாம் 2018ஆம் ஆண்டு தொடக்கம் இதற்கான வழக்கை குருந்தூர் மலை தொடர்பாக முதன் முறையாக இரு பிக்குகளுடன் 12 நபர்களுக்கும், தொல்லியல் நடவடிக்கைகள் என பாராது சட்டவிரோதமாக விகாரை அமைக்கும் கட்டுமான பொருட்கள்,புத்தர் சிலைகளுடன் வந்த போது குமுழமுனை தண்ணிமுறிப்பு ஆண்டான் குள மக்களும் இங்குள்ள அரசியல் பிரமுகர்களும் அங்கு சென்று மறித்திருந்தோம்.
அப்போது ஒட்டுசுட்டான் காவல்துறையினர் மேற்கொண்ட வழக்கு இப்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது. அந்த வழக்கிலே 2023ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 23ஆம் திகதி ஒரு காணி அபகரிப்பு நடவடிக்கையை தீர்ப்பதற்கு நாம் அங்கு சென்ற போது குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அங்கு கட்டுமான பணி நடைபெறுவதை அவதானிக்க முடிந்தது.
உடனடியாக நான் சட்டதரணிகளுடன் ஆலோசனையுடன் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்து அந்த முறைப்பாட்டின் நிமித்தம் நீதி மன்றுக்கு வருகை தந்து வழக்கை தாக்கல் செய்தோம்.
அந்த வழக்கின் பெறுபேறே இன்று கிடைத்தது. இதைத்தவிர தொல்லியல் திணைக்களம், காவல்துறையினர் எங்கள் மீது போட்ட வழக்கு இரண்டு இருக்கின்றது.
அதைவிட புத்த பிக்குமார் தங்களுடைய நடவடிக்கைக்கு வழிபட விடவில்லை என ஒரு வழக்கு இருக்கின்றது. இன்றைய தீர்ப்பே வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக இருக்கின்றது.
அனைத்து மாவட்ட சட்டதரணிகளும் இதற்கு பாடுபட்டார்கள், அரசியல்வாதிகள், மக்கள் அனைவரும் கோஷமிட்டு அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே நாம் இப்படி ஒரு நிலமைக்கு வந்துள்ளோம். தொடர்ச்சியாக நாம் சட்டதரணிகளோடு இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம்” என வலியுறுத்தியுள்ளார்.
நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றி

அத்துடன், குருந்தூர்மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியே என முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். ஏனென்றால் இது நீண்டகால பிரச்சினை சமாதானத்திற்கான ஒரு வழக்காகவே இது ஆரம்பத்தில் போடப்பட்டது .
ஆனால் சமாதானத்தை மீறி நடந்த நிகழ்வுகள் தான் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் இந்த தீர்ப்பானது ஒரு ஆரம்ப படியாகவே கருதமுடியும். இதிலே இரண்டு விடயங்கள் ஒன்று திணைக்களங்கள் யாவும் சார்பு நிலையில் இருக்கின்றது.
மற்றையது அமுலாக்கல் பிரிவுகள் சார்பாக நடந்து கொள்கின்றது என்பது இந்த தீர்ப்பிலே புலப்படுகின்றது. ஆகவே இந்த தீர்ப்பு என்பது ஆரம்ப நிலையாக இருந்தாலும் தொடர்ந்து நாம் பல படிகளாக செல்ல வேண்டி இருக்கின்றது.
இந்த தீர்ப்புக்கு எந்தளவு முக்கியத்துவம் இந்த நாட்டின் பேரினவாதம் கொடுக்கின்றது என்பதனையும் நாங்கள் எதிர்காலத்தில் அவதானிக்க வேண்டும். அது மாத்திரமல்ல இதனை ஒரு முன் உதாரணமாக உலக நாடுகளும், இந்த உலகத்தில் வாழ்கின்ற அனைவரும் ஒரு விடயமாக எடுத்து கொள்ள வேண்டும்.
முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை நிச்சயமாக ஒவ்வொருவரும் அவர்கள் எதற்காக உழைத்தவர்கள் இப்பிரதேச மக்கள், கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட்டமை இந்த வெற்றிக்கு ஒரு காரணமாக நான் கருதுகின்றேன்.
அத்தோடு இப்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தங்களது நீதிக்காக குரல் கொடுத்ததை காணமுடிந்தது. ஆகவே இந்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியாக நான் கருதுகின்றேன்” என்றார்