ஈரானுக்கு பேரிடி! குவைத்தில் சிக்கிய புரட்சிகர காவல்படை வீரர்கள்
குவைத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஈரான் புரட்சிகர காவல்படையைச் (IRGC) சேர்ந்த நான்கு பேரை குவைத் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த மே 1ஆம் திகதி மீன்பிடிப் படகு ஒன்றின் மூலம் குவைத்திற்குள் நுழைய முயன்ற ஈரான் படையினருக்கும் குவைத் இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதில் குவைத் தரப்பில் ஒரு வீரர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஈரானின் முக்கிய இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என குவைத் செய்தி நிறுவனமான 'குனா' தெரிவித்துள்ளது.
அண்டை நாட்டுக்குள் ஊடுருவல்
கைது செய்யப்பட்டவர்கள் குவைத்தின் முக்கிய வணிக மற்றும் சரக்கு போக்குவரத்து மையமான புபியான் தீவுக்குள் ஊடுருவி, அங்கு விரோதமான செயல்களைச் செய்ய திட்டமிட்டிருந்ததாக குவைத் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Image Credit: shafaq.com
போர்ச் சூழலில் ஈரான் தனது அண்டை நாட்டுக்குள் இராணுவ ரீதியாக ஊடுருவ முயன்ற முதல் சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
ஈரான் மறுப்பு
எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், அவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் கடலோரக் காவல்படையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வழிசெலுத்தல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தவறுதலாக குவைத் எல்லைக்குள் நுழைந்தனர்என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்க தங்கள் நாட்டு தூதருக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் ஈரான் கோரியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குவைத்திற்கான ஈரான் தூதரை நேரில் அழைத்து குவைத் வெளியுறவு அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |