முல்லை. வட்டுவாகலில் ஸ்ரீலங்கா கடற்படைக்கு மீண்டும் காணி சுவீகரிப்பு
முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலைகொண்டிருக்கும் கடற்படைக்கு சுவீகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2017ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வௌியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் வௌ்ள முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரணமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தினை நடத்தியதை தொடர்ந்து நில அளவீட்டுபணிகள் கைவிடப்பட்டுள்ளதுடன் நில அளவைத்திணைக்களத்தின் அளவீட்டு பணிகளுக்கு இடையூறு வழங்கிய முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன்,எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டபலர் மீது வழக்கு தொடரப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இன்நிலையில் கடந்த 08.07.2021 அன்று திகதியிடப்பட்டு கடிதம் ஒன்று முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவனால் காணி உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
2021 – 05 – 12 ஆம் திகதியன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் கரைதுரைப்பற்று பிரதே செயலாளர்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நில அளவையானது காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் நில அளவை நாயகத்தால் அளிக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவின் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் அமைந்துள்ள காணியினை பிரதான கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் பொருட்டு நில அளவை செய்வதற்காக 2021 – 07 29 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு வருகை தந்து தங்கள் காணிகளின் எல்லைகளையும் விபரங்களையும் இனங்காட்டும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
மேலும் தங்களினது காணியினை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் ஆவணத்தின் பிரதி ஒன்றையும் எடுத்துவரும்படியும் கேட்டுக்கொள்கிறேன். என அறிவிக்கப்பட்டுள்ளது.

