அக்கரைப்பற்றில் நீதிபதி இடைநீக்கத்தில் வெடிக்கும் காணி மோசடி சர்ச்சை
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த மாவட்ட நீதிபதியாகநீதிசேவை ஆணைக்குழுவின் (JSC) உத்தரவின்படி 2026 மே 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு தொலைநகல் (Fax) மூலம் அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதித்துறையின் சுயாதீனம், ஒழுக்கநெறி மற்றும் பொதுமக்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத சொத்து சேர்த்தல்
நீதிபதிக்கு எதிராக காணி மோசடி, சட்டவிரோத சொத்து சேர்த்தல், அதிகார துஷ்பிரயோகம், மறைமுக சொத்து பரிவர்த்தனைகள் மற்றும் நீதித்துறை செல்வாக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு முறைப்பாடுகள் நீதிசேவை ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் பணியாற்றிய காலப்பகுதியில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காணி உத்தியோகத்தராக பணியாற்றியதாகக் கூறப்படும் ஒருவருடன் இணைந்து காணி வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஏறாவூர், புன்னக்குடா உள்ளிட்ட பகுதிகளில் பல காணிகள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமி நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் பணமோசடி மற்றும் சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான சந்தேகங்களும் எழுந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அரசியல் தொடர்புகள்
இந்த காணி உத்தியோகத்தர் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததாகவும், யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் காணிகள் போலி ஆவணங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மூலம் கைப்பற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் சகோதரர் உள்ளிட்ட சிலருடன் இணைந்து மன்னார் மற்றும் புத்தளம் பகுதிகளில் பெரியளவிலான காணி பரிவர்த்தனைகள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதித்துறையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள்
சில வழக்குகளின் தீர்ப்புகள் மற்றும் நீதிமன்ற நடைமுறைகளை பாதிக்கும் வகையில் மறைமுக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக காணிகள் அல்லது சொத்துகள் லஞ்சமாக பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இலங்கை குற்றவியல் சட்டம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டம், பணமோசடி தடுப்பு சட்டம் மற்றும் சொத்து பொறுப்பு அறிவிப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் கடுமையான குற்றங்களாக கருதப்படலாம் என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நிலுவையில் உள்ள வழக்குகள்
இதன்படி மேற்படி காணி உத்தியோகத்தர் தொடர்பான பல காணி மோசடி வழக்குகள் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், இவ்வழக்குகளுடன் தொடர்புடைய சில நீதித்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது.
ஒரு மாவட்ட நீதிபதியைச் சுற்றி இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது, நாட்டின் நீதித்துறை அமைப்பின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், குறித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் தற்போது விசாரணை நிலையிலேயே உள்ளன.
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை எவரும் சட்டரீதியாக குற்றமற்றவராகவே கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |