மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மண்சரிவு அபாயம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மத்திய மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாகவும் இது குறித்து உரிய அதிகாரிகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
அண்மைய சீரற்ற வானிலையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள பல பாடசாலைகள் மண்சரிவு அபாயத்திற்கு நேரடியாக முகம் கொடுத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தர மதிப்பீட்டு அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் ஹசலக (Hasalaka) பகுதியைத் தவிர வேறு எந்தப் பாடசாலைகளும் பெரிய அளவில் அபாய நிலையில் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு அறிக்கை
சில பாடசாலை வளாகங்களை பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உறுதிப்படுத்த முடியும். ஆனால், அவ்வாறு செய்ய முடியாத பாடசாலைகள் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றுக்கு மாற்றுத் தீர்வுகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய மாகாணத்தில் உள்ள 160 பாடசாலைகளை உள்ளடக்கிய விரிவான மதிப்பீட்டு அறிக்கை ஏற்கனவே கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின்படி கல்வி அமைச்சு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியாளர் ஆசிறி கருணாவர்தன கூறியுள்ளார்.
இதேவேளை அதிக அபாயம் கொண்டதாக அடையாளம் காணப்பட்ட பாடசாலைகள் குறித்து மேலதிக ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இது தொடர்பான சமீபத்திய முடிவுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் கல்வி அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |