நாடாளுமன்றில் அழுது புலம்பிய முன்னாள் இராஜாங்க அமைச்சர்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்று (18) நாடாளுமன்றத்தில் பேசும் போது அழுது புலம்பியவாறு காணப்பட்டார்.
தற்போது தன்னிடம் யானை மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார்.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே லான்சா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அண்மைய வன்முறைகளால் தான் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு இழப்பீடு வழங்காமல் நியாயமான விசாரணையை கோருவதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவங்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ ஈடுபடவில்லை எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய குழு தொடர்பில் உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும் எனவும் லான்சா தெரிவித்தார்.
தந்தை, தாத்தாவிடம் இருந்து பெற்றதையும், தான் சம்பாதித்ததையும் வன்முறைச் சம்பவங்களால் இழந்துவிட்டதாகவும், ஆனால் அதை உணர்ந்து கொண்டதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் நாடு நாசமாகிவிடும் என்றும் அவர் கூறினார்.
பல நண்பர்கள் தமக்கு உதவ முன்வந்துள்ளதாகவும், பிரபல ஹோட்டல் அதிபர் ஒருவர் தன்னை தனது விடுதியில் தங்குமாறு அழைத்ததாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெரும் பொருளாதார நெருக்கடியில் ஒருவரையொருவர் கொன்றால் நாடு நாசமாகிவிடும் என்றும் அவர் கூறினார்.