11 ஆண்டுகளாக அறையில் மனைவியை பூட்டி வைத்த சட்டத்தரணி
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் வசித்து வரும் சட்டத்தரணி ஒருவர் தனது மனைவியை 11 ஆண்டுகளாக அறைக்குள் பூட்டி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோதாவரி மதுசூதனன். இவர், அப்பகுதியில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி சாய் சுப்ரியா. சமீபத்தில், சுப்ரியாவின் தாய், மதுசூதனனிடம், சுப்ரியா எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அவர் எதுவும் கூறவில்லை என்று கூறப்படுகிறது.
விரைந்து வந்த காவல்துறை
இதையடுத்து, சுப்ரியாவின் தாய் காவல்துறையில் தொடர்பு கொண்டு இதுபற்றி புகாரளித்துள்ளார். பின்னர், மதுசூதனன் வீட்டிற்கு விரைந்து வந்த காவலர்களை உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தினார் மதுசூதனன்.
நீதிமன்றை அணுகிய பெற்றோர்
அதன்பின்னர், சுப்ரியாவின் பெற்றோர், நீதிமன்றத்தை அணுகி, வாரண்ட் பெற்று, மதுசூதனன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டின் ஒரு அறையில் 11 ஆண்டுகளாக அவரது மனைவி அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
