பரந்த கூட்டணியை அமைக்கும் சஜித் தரப்பு - பிரதம கொறடா தகவல்
“எதிர்க்கட்சி என்ற வகையில் நாட்டை மீளக் கட்டியெழுப்ப பரந்த கூட்டணி அமைத்து வருகிறோம்“ என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் , நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு...
“மார்ச் 9 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்த அரசாங்கம், அடுத்த வருடத்தின் முற்பகுதியில் அதிபர் தேர்தலை நடத்தலாம் என பெரும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.
பொறுப்பற்ற அரசாங்கம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு அச்சப்படாதா? என்று அரசாங்கத்திடம் கேட்கின்றேன்.
தேர்தலை நடத்தக்கோரி நீதிமன்றத்தை நாடியபோது அரசாங்கத்திடம் பணமில்லை என்று நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார். தற்போது இந்த வழக்கை விசாரிக்க ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குறித்தும் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம்.
ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கூட இந்த அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, அதுமட்டுமின்றி அந்த முடிவை வழங்கிய நீதிபதிகளை நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழுவுக்குக் கொண்டுவரவும் அரசாங்கம் ஏற்பாடு செய்தது.
பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புதல்

எமது அரசாங்கம் தற்போது சர்வதேச சமூகத்திடம் பிச்சையெடுத்து நாடு விட்டு நாடு சென்று வருகின்றது, புதிய அதிபர் நியமிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் எமது நாட்டை மீட்பதற்கு குறித்த ஒரு நாட்டிலிருந்தும் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 300 மில்லியனிலும் அரைவாசியே கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தியாவிற்கு கடன்கள் மீளச் செலுத்தப்பட்டது. இந்தியாவின் கடன் நிவாரண முறையின் கீழ் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக நான்கரை பில்லியன் பெறப்பட்டது.
நமது கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டால் தான் நாட்டை மீட்பதற்கு ஒத்துழைப்புக் கிடைக்கும். நம் நாட்டு தலைவர்கள் எங்கு பயணம் மேற்கொண்டாலும் அவை பயன் தராது. சீனாவின் சம்மதம் பெற்றால் நாட்டை கட்டியெழுப்ப ஏதாவது உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சர்வதேச முதலீடுகள்

சர்வதேச முதலீடு தொடர்பான சட்டமே முதலீட்டாளர்கள் பின்வாங்க காரணம். 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல், 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, நாட்டுக்கு வரும் முதலீடுகள் அனைத்தும் இழக்கப்படும் என நான் நாடாளுமன்றத்தில் கூறினேன்.
20 ஆவது திருத்தத்தின் மூலம் இந்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நிறைவேற்று அதிபரால் கையகப்படுத்தப்பட்டன. இதுதான் கடந்த காலத்தில் நடந்தது, பின்னர் வந்த அரசாங்கம் இதை மாற்றினாலும், மூன்றரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் பாடம் கற்கவில்லை.
நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்து, நீதிபதிகளை நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாலும், சட்டத்தின் ஆட்சி இல்லாத நாட்டிற்கும் எந்த முதலீட்டாளரும் வரமாட்டார்கள். முதலீடு என்பது வளங்களை வெளிநாட்டுக்கு விற்பதை குறிக்காது. தற்போதைய அரசாங்கம் வளங்களை விற்று முதலீடுகள் என கூற முற்படுகிறது.
GSP பிளஸ் சலுகை இன்றைய நாட்டின் நிலைமைக்கு ஏற்ப ஆபத்தான நிலையில் உள்ளது. சட்டத்தின் ஆட்சியில் 100 நாடுகளில் 75 ஆவது இடத்தில் நமது நாடு இருக்கிறது. மக்கள் ஆணையை கோருவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை பணியாகும். இந்த அரசால் நாட்டை மீட்க முடியாது அரசாங்கத்தில் மாற்றம் வரவேண்டும்.
கடன் மறுசீரமைப்பு
நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் புதிய ஆட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். 2029 வரை நம் நாட்டைக் கொண்டு செல்ல ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை. ஆனால் இன்று மத்திய வங்கியில் 4500 மில்லியனே உள்ளது.
ஜப்பான் சென்று எல்லாம் சரியாகிவிட்டது என்றனர். ஆனால் அடுத்த நாளே ஜப்பானிய அரசாங்கம் கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு எங்கள் கொடுக்கல் வாங்கல் தொடங்கும் என்று அறிக்கை வெளியிட்டது.
எமது நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் புதிய அரசாங்கம் தேவை, அந்த அரசாங்கத்திற்கு மக்கள் கால அவகாசம் வழங்குவார்கள். சுமார் இரண்டு வருடங்கள் சர்வதேச சமூகத்துடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கக்கூடிய பொருளாதாரம் தொடர்பில் விடயமறிந்த நல்லதொரு குழு எதிர்க்கட்சியில் இருக்கின்றது.
சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், ஆனால் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை இழக்கும்“ சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.