மன்னாரில் சுகாதார விதிமுறைகளை மீறிய பிரபல உணவகம் மீது சட்ட நடவடிக்கை
மன்னார் நகரப் பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து, அந்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மன்னார் நகர சபை மற்றும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனையில், உணவகத்தின் சுகாதாரமற்ற நிலைமை கண்டறியப்பட்டது.
உணவு தயாரிப்பில் சுகாதாரமின்மை
குறிப்பாக சுகாதாரமற்ற ஈக்கள் மொய்க்கும் சூழலில் உணவு தயாரித்தல் மற்றும் மிகவும் அசுத்தமான சூழலில் உணவு சமைத்தல். கெட்டுப்போன காய்கறிகளை உணவு தயாரிப்பிற்குப் பயன்படுத்துதல் மற்றும் கோழிக் கழிவுகளால் அசுத்தமடைந்த முட்டைகளை உணவில் சேர்ப்பது

சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளைப் பிரித்தறியாது, அசுத்தமான குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) ஒன்றாகச் சேமித்து வைத்தல். சூடான உணவுகளைத் தயாரிப்பதற்கும் பரிமாறுவதற்கும் அபாயகரமான பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துதல்.
உணவகத்திற்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை
உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உரிய மருத்துவச் சான்றிதழ்கள் இன்றி உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளமை. குப்பைத் தொட்டிகளை மூடியின்றி அசுத்தமாக வைத்திருத்தல். போன்ற குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது

மேற்கண்டவாறு சுகாதார விதிகளுக்கு முரணாகச் செயற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சுகாதாரமற்ற உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் உடனடித் தடை விதித்தனர்.
அத்துடன், குறித்த உணவகத்திற்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |