கொழும்பு மாநகரின் இருண்ட பக்கத்தை மாற்றுவோம் : புதிய மேயர் அதிரடி அறிவிப்பு
கொழும்பு இலங்கையின் பணக்கார நகரமாக இருந்தாலும் அதன் இருண்ட பக்கம் இப்போது கொழும்பை மூழ்கடித்துள்ளதாகவும் அதனை மாற்றுவதில் தனக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் விராய் கெலி பல்தசார் (Vraie Cally Balthazaar) தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக பெரும்பான்மை உறுப்பினர்களால் திங்கட்கிழமை (16) தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பல்தசார் இன்று (18) காலை பதவியேற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர், ”மக்களின் பங்கேற்புடன் கொழும்பின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென நம்புகின்றேன். கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருபோதும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை.
ஒழுங்கற்ற திட்டங்கள்
எனது வெற்றி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகும். இந்த நகரத்தையும் மாற்றுவோம் என்று குடிமக்கள் குரல் எழுப்பியுள்ளனர். இந்த நகரத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
கொழும்பு இலங்கையின் பணக்கார நகரமாக இருந்தாலும், அதன் இருண்ட பக்கம் இப்போது கொழும்பை மூழ்கடித்துள்ளது. நகரத்தில் வாழும் மக்களுக்கு வெளிச்சத்தை கொடுப்பதில் எனக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
ஒழுங்கற்ற திட்டங்கள் காரணமாக கொழும்பில் பல பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும். கொழும்பு நகரத்தை உலகின் மிகவும் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும்.
கட்சி அல்லது நிற வேறுபாடின்றி 117 உறுப்பினர்களின் கூட்டுப் பணியிலேயே வெற்றி அடங்கியுள்ளது. எனவே அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
