போதைப்பொருள் சந்தேக நபர் ஹரக் கட்டாவுக்கு விடுதலைப்புலி அமைப்பு தனி ஜெட் விமானத்தை வழங்கியதா!
சிறிலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இரண்டு குற்றவாளிகளுக்கும் டுபாயில் இருந்து மடகஸ்கருக்கு செல்வதற்காக விடுதலைப்புலிகள் தனி ஜெட் விமானத்தை வழங்கியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலைப்புலிகளின் வலையமைப்பில் செயற்பட்ட ஹர்பி என்ற இந்திக பண்டார என்ற நபரே அவர்களுக்குஜெட் விமானத்தை வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது. ஹர்பி என்ற இந்த நபர் விடுதலைப்புலிகளுக்காக, பிரபுக்களை கொலை செய்வதற்கும், அவர்களை கொலை செய்யவதற்கான திட்டங்களுக்காக விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் தண்டிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
விடுதலைப்புலிகளுடன் தொடர்பு

இவ்வாறான நிலையிலேயே, பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷித என்ற குடு சலிந்து ஆகியோர் மார்ச் 1 ஆம் திகதி டுபாயில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் மடகஸ்கருக்கு சென்ற போது அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் இலங்கைக்கு அழைத்து வந்த பின்னர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் போதைப்பொருள் பாவனை தொடர்பான அறிக்கையை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
அறிக்கை சமர்ப்பிப்பு

அந்த அறிக்கையின் மூலம், குற்றவாளிகள் மடகாஸ்கருக்கு வந்த ஜெட் விமானம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளிப்படுத்தியிருந்தனர். அத்துடன் போதைப்பொருள் வியாபாரி ஹரக் கட்டா உள்ளிட்ட நண்பர்கள் குழு, வெளிநாட்டு நண்பர் ஒருவரின் குழந்தையின் மத சடங்குகளுக்காகவே மடகஸ்கருக்கு சென்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
மேலும், ஹரக் கட்டாவிடமிருந்து இரண்டு தடவைகளில் 645 கிலோ ஹெரோயின், 3 சட்டவிரோத துப்பாக்கிகள், 05 AK 47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.
இன்டர்போல் தகவல்

இதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு தரப்பினரிடம் இந்திய மேற்கொண்ட விசாரணையில், இது தொடர்பான போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் பிரதான சந்தேக நபர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இன்டர்போல் தெரிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.