விடுதலைப் புலிகள் காலத்து ஆயுதங்களை வாடகைக்கு வழங்கிய மூவருக்கு எதிராக பாயும் சட்டம்
விடுதலைப் புலிகள் காலத்து ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்து தெற்கு பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் குற்றவியல் கும்பல்களுக்கு வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை 90 நாட்கள் காவலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன அனுமதி வழங்கியுள்ளார்.
காரியக் பிரேமல் ரமேஷ், அந்தோணி பெர்னாண்டோ விக்ரம மற்றும் முகமது ரசீக் ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 21ஆம் திகதி கிரிபத்த்கொட காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் T-56 துப்பாக்கி, 30 ரவைகள் கொண்ட மெகசின் மற்றும் 5.65 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் வெளியான திட்டங்கள்
அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், குறித்த T-56 துப்பாக்கியை வவுனியாவிலிருந்து கொழும்பு பகுதிக்கு கொண்டு சென்று, குற்றத்தைச் செய்ய மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைத்து, பின்னர் அதை வவுனியாவிற்கு திருப்பி அனுப்பும் திட்டங்கள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வவுனியா குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, முக்கிய சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை செட்டிகுளம் காவல் பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் பகுதியில் கைது செய்தது.
பின்னர், சந்தேக நபர்களின் வீடு மற்றும் தோட்டத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
பயங்கரவாத விசாரணை
மீட்கப்பட்ட ஆயுதங்களில் பல்வேறு வகையான 86 கைக்குண்டுகள், T-56 தாக்குதல் துப்பாக்கியுடன் பொருந்தக்கூடிய 321 தோட்டாக்கள், மூன்று பக்கவாட்டு மெகசின்கள், 5,600 போதைப்பொருள் மாத்திரைகள் ஆகியவை அடங்கும்.
இந்த நிலையில், குறித்த எல்.ரீ.ரீ.ஈ காலத்து ஆயுதங்கள் தெற்கில் குற்றங்களைச் செய்வதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்தனவா அல்லது பணத்திற்காக பாதாள உலக நபர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பாக மேலும் விசாரணைக்காக சந்தேக நபர்களைத் தடுத்து வைக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவு அனுமதி கோரியுள்ள நிலையில், நீதமன்றம் தடுப்பு காவலுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
