விடுதலை புலிகளின் தலைவரது காணிக்கு சிவப்பு எச்சரிக்கை - உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோரின் வீட்டுக் காணி இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களினால் இன்று சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த காணியின் புனிதத் தன்மையை பாதுகாக்கும் வகையில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோரின் காணியில் இருந்த வீடு முற்றாக இடித்து அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்திருந்தன.
பற்றைகளினால் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளது எனச் சுட்டிக்காட்டி, குறித்த காணியினை துப்புரவு செய்து 22ஆம் திகதிக்கு முன் தமக்கு அறியத்தரவேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் குறித்த காணி தங்களால் கையேற்கப்படும் எனவும் வல்வெட்டித்துறை நகரசபை சிவப்பு எச்சரிக்கையினை காட்சிப்படுத்தியுள்ளது.
பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, டெங்கு நுளம்பு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவித்திருந்தார்.
இதனையத்து குறித்த காணி தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரதேச இளைஞர்களினால் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்.வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் வீட்டு காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
காணியில் இருந்த வீடு முற்றாக அடித்து அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்துள்ளன.
பற்றைகளினால் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டி, குறித்த காணியினை துப்புரவு செய்து 22ம் திகதிக்கு முன் தமக்கு அறியத்தரவேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் குறித்த ஆவணம் தங்களால் கையேற்கப்படும் எனவும் வல்வெட்டித்துறை நகரசபை சிவப்பு எச்சரிக்கையினை காட்சிப்படுத்தியுள்ளது.
உரிமைகோரினால் காவல்துறை, இராணுவம் பிரச்சினைகள்
இது குறித்து வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் இராமச்சந்திரன் சுரேன் ஊடகங்களுக்கு தொிவிக்கையில், பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக துப்புரவு செய்ய முயற்சித்தால் காவல்துறை, இராணுவம் என பிரச்சினைகள் வரும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் நகரசபை தொடர்ச்சியாக அந்த வளாகத்தை துப்புரவு செய்யும் எவரேனும் அதற்கு உரிமைகோரினால் பராமரிப்பு செலவுடன் மீள வழங்கப்படும் என்றார்.
நானே பொறுப்பேற்று துப்புரவு செய்வேன் - சிவாஜிலிங்கம்
இந்த காணி நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
இது குறித்து எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், வல்வெட்டித்துறையில் எத்தனை இடங்களில் கடுகளாக பற்றைகள் வளர்ந்துள்ளது.
அனைத்துக்கும் சிவப்பு எச்சரிக்கை ஒட்டியுள்ளார்களா? அந்த காணியை நானே பொறுப்பேற்று துப்புரவு செய்வேன் என்றார்.
