விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடி அலையும் காவல்துறையினர்! தோல்வியில் முடிந்த அகழ்வுப்பணி
கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒரு இடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தர்மபுரம் காவல்துறையினர் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று (19.02.2024) ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வு மேற்கொண்டது.
அங்கு எதுவும் கிடைக்காத நிலையில் மேலும் பல பகுதிகளை தோண்டி பார்ப்பதற்கு இரண்டாவது நாளாக இன்று (20.02.2024) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயர் அதிகாரிகள்
இந்த அகழ்வு பணியை முன்னெடுப்பதற்காக வீதிகள் மற்றும் குறித்த காணியினை சூழ அதிகளவில் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த இடத்தில் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலர் பிரசன்னமாகியுள்ளனர்.
மேலும், இதனை பார்ப்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் கூடிநின்ற நிலையில் உள் செல்வதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமையப்பெற்ற வீட்டின் உட்பகுதியில் விடுதலைப்புலிகளால் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகழ்வு பணிகள்
அந்த வீட்டில் தற்போது அரைக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் வீட்டிற்குள் ஒரு அறையின் ஒருபகுதியில் நிலத்தில் சுமார் நான்கு அடிவரை நேற்று தோண்டப்பட்டும் எதுவும் கிடைக்காத நிலையில் இன்று இரண்டாவது நாளாக கனரக இயந்திரம்கொண்டு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த அகழ்வு பணியை காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் தடையவியல் காவல்துறையினர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் கிராம அலுவலகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
