ஆலங்குளத்தில் மாவீரர் நினைவு நாளுக்கான சிரமதான பணிகள் தீவிரம்!(படங்கள்)
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் நவம்பர் (27) ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் நவம்பர் (27) மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுவது வழமை விடயமாகும்.

தமிழர் தாயகப் பகுதிகள்
அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாராக ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் இன்று (01) மாலை ஆரம்பிக்கப்பட்டது.

அகவணக்கம்
முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன
இவ்வாண்டும் நவம்பர் (27) மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.














முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 8 மணி நேரம் முன்