400 ஆண்டுகளுக்கு சிறை செல்ல வேண்டிய மகிந்த.! பொன்சேகா பகிரங்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோது நிகழ்த்தியதாகக் கூறப்படும் பெரும் அளவிலான ஊழலுக்காக, அவருக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்கான தெளிவான கண்ணோட்டம் இன்றி செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகிந்த அரசின் சீன பயணம்
அத்துடன், அவர்கள் சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமது, ருவாண்டாவின் ஜெனரல் ஜூவெனல் ஹாபியரிமானா போன்ற சர்வதேச தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பெரும் பின்தங்கியவர்கள் எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
2010 இல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசின் சீன பயணத்தின் போது, 65 பேரை உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அழைத்துச் சென்றதயும் அவர் அதன்போது நினைவூட்டியுள்ளார்.
400 ஆண்டு சிறை
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரணில் விக்ரமசிங்க என்னை அரசியலுக்குள் கொண்டுவந்தவர். அவருடைய நிலை எனக்கு வருத்தமளிக்கிறது. ஆனால் இந்த வழக்கில், அரசாங்கம் உருவாக்கிய முன்னுதாரணத்தை நான் ஏற்கிறேன்.
அதன்படி, ராஜபக்ச போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.
மேலும், சமீபத்தில் நாமல் ராஜபக்சே தன்னைப் பற்றிக் கூறிய கருத்துகளுக்கு பதிலளித்த பொன்சேகா, தன்னை சிறையில் அடைத்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம், தன்னுடன் நெருக்கமாக இருந்த 35 மூத்த இராணுவ அதிகாரிகளை, அதில் ஜெனரல்கள், பிரிகேடியர்கள், மேஜர்கள், கர்னல்கள் உள்பட, ஓய்வூதியமின்றி இராணுவ சேவையிலிருந்து நீக்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
