மாலைதீவு- இலங்கை உறவை சீர்குலைக்க சதி -மகிந்தவின் புகலிட கோரிக்கை தொடர்பில் வெளியான தகவல்
மாலைதீவில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பான புகலிடம் அளிக்க வழிவகை செய்யவில்லை எனவும் இலங்கையில் மகிந்த ராஜபக்சவை சந்திக்கவில்லை என்றும் மாலைதீவு முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த நஷீட், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, மகிந்த ராஜபக்ச மாலைதீவில் பாதுகாப்பான புகலிடத்தைக் கோரியதாக வெளியான செய்திகள் தவறானவை என்றார்.
மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் இருப்பதாகவும், இலங்கையை விட்டு வெளியேற விரும்புவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பது உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் தாம் நடத்திய சந்திப்பில் இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு வெளியேறுவது பற்றி பேசப்பட்டதா என அவரிடம் கேள்வி எழுப்பியபோது, இந்த விவகாரம் கலந்துரையாடப்படவில்லை என்றும், இந்த நேரத்தில் இலங்கை மக்களுக்கு மாலைதீவு எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து மட்டுமே கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.