ரணிலைப் போன்று மகிந்தவும் சிறையில் அடைக்கப்படலாம் : எச்சரிக்கும் அரச தரப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைக் கம்பி எண்ணியதைப் போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கம்பி எண்ணவேண்டிய நிலை வரலாம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கடற்றொழில் அமைச்சின் வளாகத்தில் நேற்று (17) நடைபெற்ற வடக்கு மாகாண பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிக்கப்போகும் ஊழல்வாதிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இன்று இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் மட்டும் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை எனச் சிலர் பேசுகின்றனர்.
எதிர்காலத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளை அலுவலகங்கள் மாவட்ட ரீதியில் திறக்கப்படவுள்ளன. எனவே, யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எதிர்காலத்தில் நீங்கள் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்.
மக்களின் பொதுப்பணத்தைக் கொள்ளையடித்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஊழல்வாதிகள் அனைவரும் நிச்சயம் விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிடும்.
அநுரகுமாரவின் அரசாங்கம்
இது அநுரகுமாரவின் அரசாங்கம், இங்கு மோசடிகளுக்கு எவ்வித இடமும் இல்லை. எமது ஜனாதிபதி குப்பி லாம்பு வெளிச்சத்தில் படித்து, வறுமை மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் முன்னுக்கு வந்தவர்.

அதனால்தான் ஏழை எளிய மக்களின் பக்கம் நின்று அவர் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றார். அரச அதிகாரிகளைக் கூடச் சுதந்திரமாக வேலை செய்யவிடாமல் இங்குள்ள சிலர் வதந்திகளைப் பரப்பி வந்தனர்.
ரணில் விக்ரமசிங்க சிறைக் கம்பி எண்ணினார், மகிந்த ராஜபக்சவும் கம்பி எண்ணவேண்டிய நிலை வரலாம். சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது நாம் ஒருபோதும் தராதரம் பார்ப்பதில்லை" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |