வேறு வழி இன்றி எடுக்கப்பட்ட முடிவு! ஒப்புக் கொண்டார் பிரதமர் மஹிந்த
எரிபொருட்களின் விலையேற்றம் தற்காலிமானது என்றும் உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தவுடன் இலங்கையிலும் விலை குறைக்கப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அவர் விளக்கிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் நட்டத்திற்கு மேல் நட்டத்தை சந்தித்து வருவதால் வேறு வழியின்றி எரிபொருள் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளது. எனினும் இது தற்காலிகமான விலை ஏற்றமாகும்.
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்த உடனேயே இலங்கையிலும் எரிபொருள் விலை குறைக்கப்படும். இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தான் நன்கு அறிவதாகவும் இந்த சமயத்தில் வேறு மாற்று வழி இன்றி எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை உயர்வு குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை குறித்து கேட்டபோது, எவருக்கும் கருத்து வௌியிடும் சுதந்திரம் இருப்பதாகவும் அதனை பிரச்சினையாக எடுக்க வேண்டாம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.