பொருளாதார நெருக்கடிக்கு நாங்கள் காரணமல்ல! மகிந்த கொடுத்துள்ள விளக்கம்
போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஆட்சியினை கவிழ்க்க முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டங்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ஆட்சியைக் கவிழ்க்க எதிரணியினர் படாதபாடுபடுகின்றனர். அவர்கள், தமது ஆதரவாளர்களை பேருந்துகளில் ஏற்றிவந்து அரச தலைவரின் செயலகத்தை முற்றுகையிட வைத்துள்ளனர்.
இதனால் என்ன பயனை அவர்கள் அடைந்தார்கள். எதிரணியினர், அரச தலைவரின் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது.
ஏனெனில், 69 இலட்சம் மக்களின் ஆணையுடனேயே இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இதை எதிரணியினர் கவனத்தில்கொள்ள வேண்டும்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல. தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர்.
அதன் விளைவுகளை இன்று அனைவரும் அனுபவிக்கின்றோம். இதை எமக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் மக்களும் புரிந்துகொள்வார்கள்.
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.அரச தலைவர் இதில் உறுதியாகவுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.