உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையின் தகவல்களை மக்களுக்கு வழங்க முடியாது - சபாநாயகர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அதிபர் விசாரணையில் உள்ள இரகசிய சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று(21) ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அதிபர் செயலாளரின் கடிதம்
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான அதிபர் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் இரகசிய சாட்சியங்கள் அடங்கிய ஆவணங்களை வெளியிடாமை மற்றும் மேற்படி சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை மக்களுக்கு வழங்காமை தொடர்பில் இச்சபையில் எழுப்பப்பட்ட விடயங்கள், மற்றும் இந்நாட்களில் பல்வேறு இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் இது தொடர்பான சரியான நிலைமையை இந்த மாண்புமிகு பேரவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
03/03/2022, 14/03/2022 திகதியிட்ட அதிபரின் செயலாளரின் கடிதத்தில் எனக்கு அறிவிக்கப்பட்டபடி, தொடர்புடைய சாட்சிகளின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக இரகசிய சாட்சி குறிப்புகள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாது.
நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அதிபரின் செயலாளர் 09/12/2023 கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.” என்றார்.