மட்டக்களப்பில் நாளை போராட்டம் : மயிலத்தமடு மக்களுக்கு ஆதரவு வழங்குமாறு சுகாஷ் அழைப்பு..!
மட்டக்களப்பு மயிலத்தமடு எல்லைக் கிராமத்தில் இருந்து 990 தமிழ் அப்பாவி பண்ணையாளர்கள் சிங்கள இனவாதிகளால் மிரட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார்கள். அவர்களுடைய மேய்ச்சல் தரைகள் பறிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மட்டக்களப்பில் நாளைய தினம்(07) இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தமிழர்களது பலம்
“இதனை எதிர்த்து நாளையதினம் மட்டக்களப்பிலே (08) பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை அவர்கள் நடாத்த இருக்கின்றார்கள். அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நாங்களும் இங்கே வந்திருக்கின்றோம்.
அன்பார்ந்த தமிழ் மக்களே, நாங்கள் இந்த இடத்தில் மயிலத்தமடு உறவுகளுக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் காட்டவேண்டிய ஒரு நேரம் வந்துள்ளது.
ஆகவே நாங்கள் அனைவரும் திரண்டு தமிழர்களது பலத்தை இங்கே காட்ட வேண்டும். ஆகவே அனைத்து தமிழ் மக்களும் நாளையதினம் மட்டக்களப்புக்கு திரண்டு வரவேண்டும்.
இந்த செயற்பாட்டை நாங்கள் அனுமதிப்போமாக இருந்தால், தமிழர் தாயகத்தில் இருந்து தமிழர்களை திட்டமிட்டு வெளியேற்றுவதற்காக ஒரு சதி முயற்சி இடம்பெற்றுக் கொண்டு இருக்கிறது.
இன்று மயிலத்தமடு, நாளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, அம்பாறை, திருகோணமலை என்று விரிவடையும்.
இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஆகவே இதனை எதிர்த்து மயிலத்தமடு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அணி திரள்வோம்.” என்றார்.
