யாழில் வாள்வெட்டுக் கும்பலின் முக்கிய புள்ளி கைது
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் முதன்மை சந்தேக நபர் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
மானிப்பாயில் அண்மையில் இருவேறு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியமை, கடந்த வருடம் அரியாலை மற்றும் பளையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் தேடப்பட்டு வந்துள்ளார்.
முதன்மை சந்தேக நபர் கைது
அவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியமை தொடர்பில் ஒருவரும், வன்முறையில் ஈடுபட்ட இருவரும் என மூவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சந்தேக நபரிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் என்பன சான்றுப்பொருட்களாக கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் ஐவருக்கு வலைவீச்சு
இந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐவர் தேடப்படுகின்றனர் என்றும் காவல்துறையினர் கூறினர்.
இந்தக் கைது நவடிக்கையை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
