அடுத்த மாதம் இலங்கை வரும் வெளிநாடொன்றின் ஜனாதிபதி
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு அடுத்த மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் புதிய கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்விஜயம் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றன.
உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளும் கடல் வளங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கொண்டவை என்பதால், கடற்றொழில் துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய கூட்டு உற்பத்தி முயற்சிகள் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பெறுமதி சேர்க்கப்பட்ட மீன் தயாரிப்புகளை சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்வதுடன், இலங்கையிலிருந்து நேரடியாக மாலைதீவுக்கு மீன் ஏற்றுமதிகளை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
மாலைதீவு ஜனாதிபதியின் இந்த விஜயமானது, பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், குறிப்பாகக் கடற்றொழில் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளில் இரு நாடுகளும் பரஸ்பர நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்று கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |