அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட தமிழர்களின் தடயம் - படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 16 ஆண்டுகள்
சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்ற வார்த்தைகள் என்றென்றும் நிதர்சனமானவை.
மனிதர்களின் பிறப்பு என்பதும் இறப்பு என்பதும் இயல்பானது. ஆனால் சில மனிதர்களே இந்த நியதிக்கு அப்பாற்பட்டு இறப்பின் பின்னரும் வரலாற்றுள் வாழ்கிறார்கள்.
அந்த வரிசையில் ஒருவராக ஈழத்தமிழர்களுடைய அரசியல் உரிமைகளுக்காக சிங்களவர்களின் அதி உயர் அதிகாரபீடத்தில் ஓயாது ஒலித்த மாமனிதர் ரவிராஜ் அவர்களின் குரல் அரச பயங்கரவாதத்தினால் மௌனிக்கச்செய்யப்பட்டு இன்றோடு ஆண்டுகள் 16 மறுக்கப்பட்ட நியாயங்களின் பட்டியலில் சேர்ந்துகொள்கிறது.
அழிக்கப்பட்ட தமிழர்களின் நாடாளுமன்ற தடயம்
ஜனநாயகத்தின் பாதையில் மென்வலுக்கோட்டை முன்வைத்து தன் இனத்திற்காக குரல் கொடுத்த ரவிராஜ் அவர்களை ஜனநாயக போர்வை போர்த்திக்கொண்ட சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் இற்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன் ஈவிரக்கமின்றி கொழும்பில் வைத்து படுகொலை செய்தது.
குறித்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட சிறிலங்கா கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் தமிழர் விவகாரங்களில் சிறிலங்கா அரசின் வழமையான நாடகமாகவே நடந்து முடிந்தது.
தமிழருக்கான அரசியியலை முழுமனதோடு பேசிய ஓர் புனிதராக தமிழரின் உரிமைக்கோரிக்கையை மிகத்தெளிவாக எடுத்துரைத்த நடராஜா ரவிராஜ் அவர்களின், இறப்பின் பின்னர் தமிழ் இனத்திற்காக அவர் ஆற்றிய உயர் பங்களிப்பை கௌரவிக்கும் முகமாக தமிழர் தேசத்தின் உயர் கௌரவமான மாமனிதர் என்ற கௌரவம் தமிழர்களின் தேசிய தலைவரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாமனிதர் நடராஜா ரவிராஜ்
தன் பிறப்பினை ஏற்றுக்கொண்ட இனத்திற்காக ஓயாது குரல் கொடுத்த ஒருவராக அச்சமின்றி தாம் குற்றம் சாட்டுபவர்களின் கோட்டையிலையே தமக்கான உரிமையினைக்கோரி நின்ற மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் தைரியமும் தியாகமும் போற்றுதற்குரியதே.
ஆண்டுகள் பல கடந்தும் அரச படைகளின் துப்பாக்கி ரவைகள் குடித்த மாமனிதர் ரவிராஜ் அவர்களின் படுகொலையும் ஈழ நிலப்பரப்பில் நீதியற்றுப்போன எத்தனையோ படுகொலைகளில் ஒன்றாகவே கிடப்பில் இடப்பட்டிருக்கிறது.
தான் கொண்ட இலட்சியத்திற்காக தன்னைச்சார்ந்த மக்களுக்காக தனது உயிரையும் துச்சமென நின்று குரல்கொடுத்து அதற்காகவே தனது இன்னுயிரை ஈந்த மாமதனிர் நடராஜா ரவிராஜ் அவர்களை, இன்றைய நாளில் ஈழத்தமிழர்களின் வரலாற்று வலிகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் விதமாக ஐபிசி தமிழ் நன்றியோடு நினைவுகூருகின்றது.