இராணுவத்தினரால் வரவழைக்கப்பட்ட நபர் சடலமாக மீட்பு : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
புதிய இணைப்பு
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் குறித்த இளம் குடும்பஸ்தரின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, உடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதியில் பலத்த அடிகாயங்கள் இருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு -(Mullaitivu) முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் காணாமல் போன இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றுமுன்தினம் காணாமல் போன குறித்த நபர் இன்றையதினம் (09.08.2025) காலை முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து நேற்று முன்தினம் (07.08.2025) இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
துரத்தி துரத்தி தாக்கப்பட்டுள்ளனர்
குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுவத்தினரால் தாெலைபேசியில் கூறப்பட்டுள்ள நிலையில் அதனையடுத்து நேற்றுமுன்தினம் இரவு ஐந்து பேர் இராணுவ முகாமிற்கு சென்றுள்ளனர்.
இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களை தடிகள், கம்பிகளால் குறித்த இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை இராணுவத்தினர் துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர்.
அதனால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
இதனையடுத்து நேற்றையதினம் இராணுவ முகாமிற்கு வந்த இராணுவ வாகனம் வீதியில் வைத்து பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்கப்பட்டது.
அத்துடன் மாயமாகிய குறித்த இளைஞர் தப்பி ஒடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி வலை விட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டும் நேற்று இரவுவரை குறித்த நபர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் காணாமல் போன குறித்த இளைஞனின் சகோதரரால் இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சகோதரர் தெரிவித்திருந்தார்.
காணாமல் போன குறித்த நபர் இன்று சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் தனது தம்பியை அடித்து கொலை செய்து விட்டு இன்றையதினம் அதிகாலை குளத்தில் போட்டுள்ளதாக இறந்தவரின் அண்ணா மற்றும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா
