முற்றாக முடங்கியது மன்னார்..!
வடமாகாணம் தழுவிய ஹர்த்தால் போராட்டத்திற்க்கு மன்னார் மாவட்ட வர்த்தக சங்கங்கள், மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், பொது மக்கள் உட்பட அனைவரும் பூரண ஆதரவு வழங்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டம் முழுவதும் முற்றாக முடங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள தினைக்களம் தமிழ் முஸ்லீம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றமை கிழக்கில் மேய்ச்சல் தரவைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்த கோரியும்,மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை தமிழ் முஸ்லீம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம் பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும் இன்றையதினம் (25) செவ்வாய் கிழமை வடமாகணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுருந்தது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அதே நேரம் அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம் பெற்ற போதிலும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





