மன்னார் மருதமடு அன்னையின் திருவிழாவிற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
மன்னார் (Mannar) மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவில் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும்,கலந்து கொள்ளும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை (நாளை) மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா இடம்பெறும்.
அழைப்பு
வழமை போல் திருவிழா திருப்பலி 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்படும்.ஆவணி திருவிழாவையொட்டி வழமை போல் போக்குவரத்து, பாதுகாப்பு,நீர் வசதிகள், மின்சார வசதி,உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே இம்முறை திருவிழா திருப்பலியை சிலாப மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி
விமல் சிறி ஜயசூரிய ஆண்டகை தலைமையில், நானும், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்
அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார்,ஏனைய அருட்தந்தையர்கள் இணைந்து
கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக் கொடுப்பார்கள்.
ஏனைய மாவட்டங்களின் துறவிகள் ,அருட்பணியாளர்கள் இக்கூட்டு திருப்பலியில்
கலந்து கொள்வார்கள்.உங்கள் அனைவரையும் திருவிழா திருப்பலிக்கு அன்புடன்
வரவேற்கின்றோம்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச்சொரூப பவணியும்,அதனை தொடர்ந்தும் திருச்சொரூப ஆசிர்வாதமும் வழங்கப்படும்” என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |