நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவுதினம்! இளைஞர்களின் இரத்ததான முகாம் (படங்கள்)
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலின் போது பலியானவர்களின் 27 ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று(9) அனுஷ்ட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தாக்குதலில் பலியான எம்மவர்களை நினைவுகூரும் முகமாக இன்று(10) காலை இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது.
நவாலி சென் பீற்றர்ஸ் இளைஞர் மன்றத்தினால் குறித்த இரத்ததான முகாம் நடாத்தப்படுள்ளது.
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 27 ம் ஆண்டு நினைவுதினம்
இலங்கை பாதுகாப்புப் படையினரால் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலின்போது பலியானவர்களின் 27 வது ஆண்டு நினைவுதினம் நேற்றாகும்.
நவாலி தேவாலயத் தாக்குதல் படுகொலை என்பது 1995ம் ஆண்டு ஜூலை 9 இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதலில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 150 பேருக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.
அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியிலிருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த புக்காரா விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசியது. மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு தேவாலயங்களும் பலத்த சேதமடைந்தன.
இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 65 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், சுமார் 150ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
