பட்டப்பகலில் இடம்பெறும் படுகொலைகள் குறித்து சுமந்திரன் விசனம்
பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை பாதாளக் குழு எனக் கூறி நியாயப்படுத்த முடியாது எனவும் அரசாங்கம் சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கும், பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசு நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்தநிலையில் இது பற்றிக் கருத்துரைத்த சுமந்திரன், ”பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைத் தாம் வரவேற்கின்றோம்.
சட்டவிரோத படுகொலைகள்
இருப்பினும் அதனைக் காரணமாகக் கூறி பொது வெளியில் பட்டப்பகலில் இடம்பெறும் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு அரசு முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாறாக சட்டம், ஒழுங்கை உரியவாறு பேண வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது.

மேலும் இந்த வருடத்தில் இதுவரை சுமார் 50 இற்கும் மேற்பட்ட இவ்வாறான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, இனிவரும் காலங்களில் இத்தகைய சட்டவிரோத படுகொலைகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சுமந்திரன் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |