பாரிய அளவில் தங்க மோசடி : பொது மக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறை
பாரிய அளவிலான தங்க மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் குறித்த தகவல்களை வழங்குமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்வத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குருணாகலைச் சேர்ந்த லொகுபதுருகே மகே விந்தக டி சில்வா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த சந்தேக நபர், சுமார் மூன்றரைக் கிலோ தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடம் 50 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட இரும்புத் துண்டுகளைக் கொடுத்து அவர் ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கம்
அத்துடன், அவர், தன்னை ஒரு கடற்படை அதிகாரி என்று பொய்யாகக் கூறி, போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இவர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மேலும் இருவர் குறித்த சந்தேகநபருக்கு எதிராக முறைப்பாட்டை செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்தநிலையில் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தகவல்களை அறிந்தவர்கள் 011-2395371 அல்லது 071-8594915 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |