இந்திய இழுவைப் படகு விவகாரம் : யாழில் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்
இந்திய கடற்றொழிலாளர்களின் (Indian Fishermen) சட்டவிரோத இழுவைப் படகு தொழில் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதியன்று யாழ் (Jaffna) நகரில் குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்றொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
வீதிக்கிறங்கி போராடுதல்
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ”இந்திய கடற்றொழிலாளர்களின் சடவிரோத இழுவைமடி தொழில் நடவடிக்கையானது யாழ். வடக்கில் குறிப்பாக எமது தீவக பிரதேசத்தை கடுமையாகப் பாதித்து வருகின்றது.
இதை நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள், கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு கிடைக்காத நிலையில் எமது வாழ்வுரிமைக்கான பொருளாதார ஈட்டலை உறுதி செய்ய நாம் வீதிக்கிறங்கி போராட தீர்மானித்துள்ளோம்.
அதனடிப்படையில் தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள மகஜர்
அதனடிப்படையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறும் இந்த எமது இந்த போரட்டம் யாழ்.பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பித்து ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக செல்லவுள்ளதுடன் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் வழங்கவுள்ளோம்.
எமது இந்த போராட்டத்துக்கு யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தை வலுவூட்டுமாறு அழைப்பு விடுகின்றோம்” என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
