மன்னாரில் மாவீரர் தின அனுஷ்டிப்பை தடை விதிக்கக் கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு
மன்னாரில் நாளை (27) மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாகக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்று(26) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை மன்னார் நீதவான் நிராகரித்துள்ளார்.
தமக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நாளைய தினம் சனிக்கிழமை (27) ஆம் திகதி மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், உப தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கும் எதிராக மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்கக் கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (26) மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் போதிய சாட்சிகள் மன்றில் சமர்ப்பிக்கப்படாமையினால், மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை மன்னார் நீதவான் நிராகரித்தார்.