கோர விபத்து - மருத்துவ பீட மாணவன் பரிதாபமாக பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு - வந்தாறுமூலைப் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
ஒரு குழந்தையின் தந்தையான 23 வயதுடைய எம்.மசூத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மேற்படி மாணவன் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஓட்டமாவடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த உழவு இயந்திரம் திடீரென வலது புறத்து உள்வீதிக்கு மாறிய வேளை அதனுடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்துக்கும் இழுவைப் பெட்டிக்கும் இடையில் மோட்டார் சைக்கிள் சிக்கியுள்ளது.
தலையில் பாரிய காயம் ஏற்பட்டு இரத்தப் பெருக்கினால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திடீர் மரண விசாரணை
உழவு இயந்திரத்தின் சாரதி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர் விசாரணையை மேற்கொண்டார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |