மத்திய கிழக்கு போர் : இலங்கையின் தெங்கு ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சவால்கள்
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலை இலங்கையின் தெங்கு ஏற்றுமதியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், கப்பல் போக்குவரத்துத் தடைகள் மற்றும் சரக்குக் கட்டண உயர்வு காரணமாக சில சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தெங்குசார் உற்பத்திகள் மிகக் குறைந்த அளவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த நேரடிப் பாதிப்பு குறைவாக உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மூடப்பட்ட வழித்தடங்கள்
குறிப்பாக, சுமார் 8 வீத தெங்குசார் உற்பத்திகள் டுபாய் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், ஒட்டுமொத்தத் துறையில் இதன் நேரடித் தாக்கம் 12 முதல் 14 வீதம் வரை மாத்திரமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏற்றுமதியின் மீதான நேரடித் தாக்கம் குறைவாக இருந்தாலும், கப்பல் வழித்தடங்களில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக மறைமுக விளைவுகள் உருவாகியுள்ளதாக ரணதுங்க மேலும் கூறினார்.
சில வழித்தடங்கள் மூடப்பட்டதாலும், மத்திய கிழக்கு வழித்தடங்கள் வழியாக கப்பல்களால் செல்ல முடியாததாலும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற சந்தைகளை அடைவதற்கு முன்பு கப்பல்கள் நீண்ட மாற்று வழிகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதன் விளைவாக, கப்பல் கட்டணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்
தேங்காய் எண்ணெயைத் தவிர, இலங்கை தற்போது பெறுமதி சேர் பொருட்களை இறக்குமதி செய்வதில்லை எனவும் சாந்த ரணதுங்க விளக்கினார்.

அத்துடன் சில சந்தர்ப்பங்களில், உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத பொருட்களுக்காக, ஏற்றுமதி செயலாக்கத்திற்கான தற்காலிக இறக்குமதி (TIEP) திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நுகர்வோருக்கு ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தேங்காய் சர்க்கரை மற்றும் செறிவூட்டப்பட்ட இளநீர் போன்ற பொருட்கள் இதில் அடங்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |