உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறிய பத்து இலட்சம் மக்கள்
உக்ரைன் ரஷ்ய யுத்தம் ஏழாவது நாளாக தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில் உக்ரைனிலிருந்து பத்து இலட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு அகதிகளாக சென்றோரின் எண்ணிக்கை பதின்மூன்று இலட்சம்தான். ஆனால் கடந்த ஒரு வாரத்திலேயே உக்ரைனிலிருந்து அகதிகளாக செல்வோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட அந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.
அகதிகளுக்கான ஐநாவின் உயர் ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி “துப்பாக்கிகள் மௌனமாக வேண்டும், இதனால் உக்ரைனில் இன்னும் இருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு உயிர்காக்கும் மனிதநேய உதவிகளை வழங்க முடியும்” என, ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்ய நெருக்கடியால், உக்ரைனில் சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் பேர் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்வார்கள் என்றும், அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படும் எனவும் இந்த ஆணையம் கணித்துள்ளது.