வடகிழக்கில் இராணுவத்தின் அடாவடி : ஹர்த்தாலுக்கு மனோ கணேசன் ஆதரவு
வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் அராஜகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை (15) முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலை தாம் ஆதரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட நபர் மாயமாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்வரும் 15ஆம் திகதி ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ள நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து மனோ கணேசன் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த அறிக்கையில், ”கடந்த 7ஆம் திகதி ஐந்து தமிழ் இளைஞர்கள் முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
குளத்தில் இருந்து சடலமாக மீட்பு
தப்பிச் சென்றவர்களில் ஒருவரான, கபில்ராஜ், 9 ஆம் திகதி முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தப்பிச் சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல.
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சி, “நீதியான விசாரணை”, “ வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை நாம் ஆதரிக்கிறோம்.
ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் அநுரகுமார திசாநாயக்க, இது தொடர்பில் உடன் விசாரணை, தண்டனைக்குரிய சட்ட நடவடிக்கை, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.
அத்துடன் இதை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். “இராணுவ பிரசன்னம் குறைப்பு” என்பதுதான் இந்த ஹர்த்தால் சொல்லப்போகும் செய்தி.
இன அடிப்படையிலான போர்
போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும்.
எனவே அவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து, “குளம் வெட்டுவது, குளத்தில் தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது, காய்கறி சந்தை நடத்துவது” போன்ற இன்ன பிற அபிவிருத்தி பணிகளில் அநுரகுமார திசாநாயக்க ஈடுபடுத்த வேண்டும்.
இதற்கு முன் இப்படியான சம்பவங்கள் நடக்க வில்லையா? அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?” என எம்மை பார்த்து, தம்மை அறிவாளிகள் என நினைத்துக் கொண்டு, கேள்வி கேட்கும், ஜேவிபி அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆகியோரின் வாய்களையும் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் மூட வேண்டும்.
அன்றைய அரசுகள் மாறி, மாறி செய்தவற்றை செய்ய நாம் வரவில்லை. மாற்றி செய்யவே நாம் வந்தோம்”, என நீங்கள் தான் மக்களுக்கு கூறினீர்கள். அதையே தான் நீங்களும் செய்ய வந்தீர்கள் என்றால், நாம் எதிர்க்கத்தான் செய்வோம். அரச இராணுவ பயங்கரவாதத்தை, நாம் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்கிறோம். எப்போதும் எதிர்ப்போம்.
வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடைபெற அழைப்பு விடுத்து இருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கோரிக்கையை, தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்று, ஆதரவை அறிவிக்கின்றது“ என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
