காணாமற்போன சிறுமி காட்டுப்பகுதியில் உள்ள குகை ஒன்றிலிருந்து மீட்பு
காணாமற்போன சிறுமி
கடந்த 3ஆம் திகதி லுணுகலை 27 ம் கட்டை பகுதியிலிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் 14 வயது சிறுமி காட்டுப்பகுதியில் உள்ள குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியுடன் தங்கியிருந்த இளைஞர் ஒருவரும் 58 வயது நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறைக்கு கிடைத்த தகவல்
சிறுமி காணாமற் போனமை தொடர்பில் லுணுகலை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், பல்லேகிருவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் 58 வயதுடைய லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் குறித்த சிறுமியும் உடகிருவ- கொட்டிகல்கே காட்டுப் பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
காட்டுப்பகுதியில் தேடுதல்
அதற்கமைய, இன்று காலை விசேட அதிரடிப் படையினர் மற்றும் லுணுகலை காவல்துறையினர் இணைந்து உடகிருவ காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்ட போது, குறித்த மூவரும் கற்குகை ஒன்றினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை லுணுகலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.