தீர்த்த உற்சவத்தில் நீராடச் சென்ற மாணவன் கடலலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு!
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் கடலலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை(26) மாலை 3.30 மணியளவில் பெரியதம்பிரான் ஆலய தீர்த்த உற்சவத்தில் நீராடச் சென்ற வேளை இடம்பெற்றுள்ளது.
தீர்த்த உற்சவத்தில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் கடலலையில் சிக்கிய வேளை இரு மாணவர்கள் உயிர் தப்பிய நிலையில் கரை சேர்ந்ததுடன் மற்றுமொரு மாணவன் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மாயமானார்.
பெரியநீலாவணை பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க இராசநாயகம் சனுஜன் என்ற மாணவனே இவ்வாறு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
கரையொதுங்கிய மாணவனின் சடலம்
கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவனை தேடும் பணியில் கடற்படையினர், கடற்தொழிலாளர்கள், உறவினர்கள் ஈடுபட்டிருந்த போதும் குறித்த மாணவனை கண்டு பிடிக்க முடியாமல் போன நிலையில் நேற்று மாலை(27) மாணவனின் சடலம் பெரியநீலாவணை பகுதியில் கரையொதுங்கியது.
இதனையடுத்து மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
மேலும், உடல்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைபெரிய நீலாவணை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.